அத்தியாயம் - 2

இந்தியப் படையின் ஆக்கிரமிப்பிற்குள் ஈழ மண் இருந்த கால கட்டத்தில்
வடக்குக் கிழக்கு முழுவதிலும் உள்ள கிராமங்களிலும், காடுகளிலும் கஞ்சா விதைகளைத் தூவி, கஞ்சாச் செடிகளை உருவாக்கும் காரியத்தை இந்தியப் படையினர் அதி சிரத்தையுடன்; மேற்கொண்டது பற்றிக் கடந்த வாரம் பார்த்திருந்தோம்.

.....................

அக்கால கட்டத்தில், வடக்கு கிழக்கில் உள்ள கிராமங்களிலும், காடுகளிலும் இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான கஞ்சாச் செடிகளை இந்தியப் படைகள் உருவாக்கினார்கள்.
கஞ்சாச் செடிகளை உருவாக்குவதற்கென்றே இந்திய அமைதி காக்கும் படையில்; ஒரு தனிப் பிரிவு செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அப்பொழுது இந்த விடயத்தைப் பற்றி தமிழ் மக்கள் அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. அக்காலகட்டத்தில் இந்தியப் படை ஜவான்கள் ஈழத்தில் பல வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள். வெளிநாட்டு மின்சார உபகரணங்களை மலிவு விலையில் கொள்வனவு செய்து இந்தியாவிற்கு கொண்டு செல்வது முதல், நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பாரிய மரங்களை வெட்டி இந்தியாவிற்கு கொண்டு செல்வது வரை, பல வியாபார நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள். கஞ்சாச் செடிகளை உருவாக்கி கஞ்சாவை இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்காகவே இந்தியப் படையினர் கஞ்சா செய்கையில் ஆர்வம் காண்பிப்பதாக நினைத்து தமிழ் மக்கள் இந்த விடயத்தில் அத்தனை ஆர்வம் காண்பிக்கவில்லை.
ஆனால் ஈழத்து இளைஞர்கள் மத்தியில் கஞ்சாப் பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே, இந்தியா இத்தகைய கைங்கரியத்தைச் செய்து வருகின்றது என்று பாவம் எமது மக்களுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.

........................

கேவலமான சதி:
தமிழர் பிரதேசங்களில் இந்தியப் படைகள் கஞ்சா செடிகளை வளர்த்ததற்கு பல காரணங்கள் இருந்தன.
முதலாவது, தமிழ் மக்களை கஞ்சா வியாபாரம் செய்வதற்குத் தூண்டுவது. யுத்த நிலை காரணமாக அக்காலகட்டத்தில் பல தமிழ் விவசாயக் குடும்பங்கள் பொருளாதார இன்னல்களை அனுபவித்து வந்தார்கள். நல்ல வருமானமுள்ள ஒரு தொழிலாக கஞ்சா வியாபாரத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஆயிரக்கணக்கான தமிழ் விவசாயக் குடும்பங்களை, கஞ்சாப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்தமுடியும் என்று இந்தியத் தரப்பினர் நினைத்தார்கள்.

இந்தியப் படையினர் வடக்குக் கிழக்கு மாகாணத்தில் கஞ்சா பயிர்ச் செய்கையை பாரிய அளவில் மேற்கொள்ளுவதற்கு, மேற் கூறப்பட்டதை விட மற்றொரு முக்கிய நோக்கம் அவர்களுக்கு இருந்தது. வடக்குக் கிழக்கில் உள்ள இளைஞர்களை கஞ்சாப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் ஒரு கேவலமான நோக்கம் இந்தியாவிடம் காணப்பட்டது.
கஞ்சாப் புழக்கம் தமிழ்ப் பிரதேசங்களில் அதிகமாக, அதிகமாக, தமிழ் இளைஞர்கள் கஞ்சாவைப் புகைக்க ஆரம்பிப்பார்கள். படிப்படியாக கஞ்சாப் பழக்கம் தமிழ் இளைஞர்களிடையே பரவிவிடும்.

கஞ்சா புகைப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்று எம்மில் அனேகமானவர்களுக்குத் தெரிந்திருக்கும். எதற்கும் கவலைப்படாமல், அனைத்திற்குமே சிரித்தபடி, ஒருவித போதை மிதப்பில் இருப்பார்கள். அவர்களுக்கு கோபம் என்பது ஒருபோதும் வராது. எந்தவித உணர்ச்சியும் ஏற்படாது. எப்படியான நிகழ்வுகளும் அவர்களைப் பாதிக்காது. ஒரு முறை கஞ்சாவை உட்கொண்டவர்கள், தொடர்ந்து கஞ்சாவை உள்கொள்ளும்படியான போதைக்கு அடிமைகளாக மாறிவிடுவார்கள். இதுதான் கஞ்சாவின் மகிமை.
இப்படிப்பட்ட போதைக்கு, தமிழ் இளைஞர்களை அடிமையாக்க இந்தியா ஏன் விரும்பியது?
........................

சிதைக்கும் நோக்கம்:
ஈழத்தமிழ் இளைஞர்களின் விடுதலை உணர்ச்சிகளை அழிக்க இந்தியா விரும்பியது. எதிர்கால ஈழத் தமிழ் சந்ததியினரை, தமது இனம் சார்ந்த எந்தவித பிரஞ்ஞையும் இல்லாத ஒரு சந்ததியாக உருவாகவேண்டும் என்று இந்தியா திட்டமிட்டது. தனது இந்தக் கேவலமான சதியின் ஒரு நகர்வாகத்தான், இந்தியத் தரப்பினர் தமிழீழப் பிரதேசங்களில் கஞ்சாச் செடிகளை இலட்சக்கணக்கில் உருவாக்கியிருந்தார்கள்.
இந்தியப் படையினர் உருவாக்கியிருந்த கஞ்சாச் செடிகள், தற்பொழுது கூட வடக்கு கிழக்கில் காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் இந்தியப் படையினர் உருவாக்கியிருந்த கஞ்சாச் செடிகளை அழிக்க, இந்தியப் படையின் வெளியேற்றத்தின் பின்னர், விடுதலைப் புலிகளின் வனவளத்துறை கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டி இருந்தது. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் சண்டைகள் அதிகம் இடம்பெறும் பிரதேசங்களான வாகநேரி, பொண்டுகள்சேனை, காயங்கேணி, குளத்துமேடு போன்ற பிரதேசங்களில் இந்தியப் படையினர் விதைத்த இலட்சக்கணக்கான கஞ்சாச் செடிகள் இப்பொழுதும் இருக்கத்தான் செய்கின்றன.
.
.................

முகாம்களிலும்:
தமிழ் இளைஞர்களிடையே போதைப் பழக்கவழக்கத்தை உருவாக்கும் நோக்குடன் இந்தியப் படையினர் மேற்கொண்டிருந்த நடவடிக்கையின் மற்றொரு பக்கம், அக்காலங்களில் இந்தியப் படையினருடன் சேர்ந்தியங்கிய தமிழ் ஆயுதக் குழுக்களின் முகாம்களில் அரங்கேறியிருந்தது. தமிழ்க் குழுக்களது முகாம்களுக்கு இந்திய ’ரம்’ மதுப்புட்டிகள் பெட்டி பெட்டியாக வினியோகிக்கப்பட்டது. தமிழ் ஆயுதக் குழுக்களில் அங்கம் வகித்த இளைஞர்களில் பலர் இந்தியாவின் விஷேட மதுபானமான ரம் இற்கு அடிமையாகியிருந்தார்கள். அத்துடன் வெற்றிலை பாக்குடன் ஒரு வகைப் போதை வஸ்தை கலந்து தயாரிக்கப்படும் ’பாண் பராக்’ எனப்படும் மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பொருளுக்கும், தமிழ் ஆயுதக் குழுக்களில் அங்கம் வகித்த இளைஞர்களில் பலர் திட்டமிட்டு அடிமையாக்கப்பட்டிருந்தார்கள்.

பங்காளதேஷிலும்....
இந்த கஞ்சாச் செடி வளர்க்கும் சதியை இந்தியா ஈழத்தில் மட்டும் அரங்கேற்றியிருக்கவில்லை. ஏற்கனவே பங்கானதேஷை விடுவிக்கவென்று இந்தியப் படைகள் அங்கு நிலை கொண்டிருந்த காலத்திலும், இதே வகையான பயிர் வளர்ப்பை அங்கு மேற்கொண்டிருந்தார்கள். ஈழத்தைப் போலல்லாது பங்காளதேசில் இந்தியா தனது சதியின் பயனை அறுவடைசெய்து வருகின்றது. முன்னர் கிழக்குப் பாக்கிஸ்தானாக இருந்த பங்காளதேஷ் நாட்டின் இன்றைய தலைமுறையினரில் அதிகமானவர்கள் கஞ்சா போதைப் பழக்கத்திற்கு உள்ளாகி இருக்கின்றார்கள். பங்காளதேஷின் இளம் தலைமுறையினரிடையே இன்று புரையோடிக் காணப்படும் போதை வஸ்துப் பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்பதற்கு அந்நாட்டு அரசு இன்று படாதபாடு படுகின்றது.
இந்தியாவில் விடுதலைப் போராட்டம் மும்முரமாக நடைபெற்று வருகின்ற நாகலாந்து, மனிப்பூர் மாநிலங்களிலுள்ள காடுகளிலும், கிராமங்களிலும் கூட இந்தியப் படைகள் கஞ்சாப் பயிர்ச் செய்கை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பதும் நோக்கத்தக்கது.

தொடரும்…


நன்றி-நிலவரம்



 

 
   

:: Universal Currency Converter ::


நாணயமாற்று

this amount
பெறுமதியை வழங்கவும்

of this type of currency
மாற்றும் நாணயம்

into this type of currency.
மாற்றவேண்டிய நாணயம்
 


 

 



Copyright 2000-2007 Tamiowebradio.com