-துரைரட்ணம்-

 

அங்கம் - 2

சந்திரிக்காவின் களங்கத்தை போக்க நீலன் செய்த திருகுதாளம்....

கூட்டணி மும்மூர்த்திகளுக்கு சந்திரிக்கா வழங்கிய குண்டுதுளைக்காத கார்கள்....

 
குமார் பொன்னம்பலம் முதல் இன்று வரை இடம்பெற்றுவரும் தமிழ் அரசியல்தலைவர்கள், ஊடகவியலாளர்களின் படுகொலைகள்...... பின்னணிகள்.................இரகசியச் சதிகள்............ஆதாரங்கள்...................

          
நானே தலைமை தாங்கி தமிழர்களை கொல்வேன் என ஜனாதிபதி சந்திரிக்கா கூறவில்லை என தமிழர் விடுதலைக்கூட்டணி வெளியிட்ட அறிக்கையில் மோசடி இடம்பெற்றிருந்தது என கூறியிருந்தேன் அல்லவா…

அந்த மோசடியை தமிழர் விடுதலைக்கூட்டணியின் சாதாரண உறுப்பினர்கள் செய்யவில்லை. சட்டம் படித்தவர்கள் தம்மை சட்டமேதைகள் என கூறிக்கொள்பவர்கள்தான் செய்தார்கள்.

தான் கூறியது எப்படியோ அம்பலமாகிவிட்டது. யோசித்தார் சந்திரிக்கா. தனது ஆலோசகர்களான நீலன் திருச்செல்வத்தை தனது மாளிகைக்கு அழைத்தார். அங்கு சென்ற நீலன் திருச்செல்வம் தாங்கள் அறிக்கை ஒன்றை வெளியிடுவதாக உறுதியளித்து விட்டுவந்தார்.
     
ஆனந்தசங்கரியுடனும் ஆலோசனை நடத்தினார். அந்த நேரத்தில் ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக்கூட்டணியின் சிரேஷ்ட உபதலைவர்.
தலைவர் சிவசிதம்பரம் சுகயீனமுற்றிருந்ததால் தலைவருக்குரிய பணிகளை ஆனந்தசங்கரியே செய்து வந்தார். அப்போது கட்சியின் செயலாளராக இருந்த சம்பந்தன் கொழும்பில் இருக்கவில்லை.
கட்சியின் செயலாளர்தான் அறிக்கையில் கையொப்பம் இடவேண்டும்.

சந்திரிக்கா அம்மையாரின் களங்கத்தை போக்க நீலன் திருச்செல்வமும் ஆனந்தசங்கரியும் இணைந்து அறிக்கையை தயாரித்தனர். அறிக்கையின் கீழ் செயலாளர் நாயகம் ஆர்.சம்பந்தன் என சம்பந்தனின் கையொப்பமும் இடப்பட்டது. சம்பந்தன் என கள்ளகையெழுத்தை வைத்தவர் நீலன் திருச்செல்வம்தான்.

நீலன் திருச்செல்வத்தின் வீட்டிலிருந்தே சகல பத்திரிகைகளுக்கும் அறிக்கைகள் அனுப்பப்பட்டது. சண்டே லீடர் பத்திரிகைக்கும் ஒரு பிரதி அனுப்பபட்டது. சண்டே லீடர் அலுவலகத்தில் ஆசிரியர் லசந்த விக்கரமசிங்கவும் குமார் பொன்னம்பலமும் பேசிக்கொண்டிருந்த போதே தொலைநகல் மூலம் தமிழர் விடுதலைக்கூட்டணியின் அறிக்கை அங்கு வந்து சேர்ந்தது.

அந்த அறிக்கையை லசந்த விக்கிரமசிங்க குமார் பொன்னம்பலத்திடம் காட்டினார்.

குமார் பொன்னம்பலம் நெருங்கிய நண்பர்கள் என்பதால் மட்டுமல்ல சந்திரிக்காவின் நானே தலைமை தாங்கி தமிழர்களை கொல்வேன் என்ற சர்ச்சைக்குரிய விடயத்தை சண்டே லீடர் பத்திரிகையில் எழுதி வருபவர் என்ற ரீதியிலும் அந்த அறிக்கையை அவர் குமாரிடம் காட்டினார்.
                                               
அறிக்கையை பார்த்த உடன் குமார் உடனடியாக சொன்னார்.
இதில் பெரிய மோசடி இருக்கிறது. இது சம்பந்தனின் கையொப்பம் இல்லை. நீலன்தான் கையொப்பம் வைத்திருக்கிறார் என்றார் குமார் பொன்னம்பலம்.
சண்டே லீடர் பத்திரிகையில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் அறிக்கை வெளியிடப்பட்டதுடன் இந்த கையெழுத்து மோசடி பற்றியும் குமார் பொன்னம்பலம் விலாவாரியாக எழுதினார். ஒருவரின் கையெழுத்தை இன்னொருவர் வைப்பது கிமினல் குற்றம் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்

சம்பந்தனின் உண்மையான கையொப்பம் நீலன் திருச்செல்வம் இட்ட கள்ளகையொப்பம் நீலன் திருச்செல்வத்தின் கைஎழுத்து எப்படி இந்த கள்ளகையொப்பத்திற்கு பொருந்துகிறது என்பதை படங்களுடனும் ஆதாரங்களுடனும் சண்டேலீடர் வெளியிட்டது.

சட்டத்துறையில் கலாநிதி பட்டம் பெற்றவர் என கூறிக்கொள்ளும் நீலன் திருச்செல்வம், நாட்டின் ஜனாதிபதி என கூறிக்கொள்ளும் சந்திரிக்கா போன்றவர்கள் எப்படி சின்னத்தனமாக மோசடி வேலைகளை செய்கிறார்கள் என்பதை மிக தெளிவாக அழகாக குமார் பொன்னம்பலம் ஆதாரங்களுடன் நிரூபித்திருந்தார்.

இந்த விடயங்களை சண்டே லீடர் பத்திரிகை வெளியிட்டது. அரசியல் மட்டங்களிலும் இராஜதந்திர வட்டாரங்களிலும் இது பரவலாக பேசப்பட்டது.

கள்ளகையெழுத்து விவகாரம் அம்பலமானதையடுத்து சம்பந்தன் ஒரு அறிக்கை விட்டார். நான் சொல்லித்தான் நீலன் திருச்செல்வம் என்னுடைய கையொழுத்தை வைத்தார் என்று.

மெத்தப்படித்தவர்களின் இந்த முட்டாள்தனங்களை பார்த்து அழுவதாக சிரிப்பதாக என மௌனமாக இருந்தனர் தமிழ் மக்கள். தமிழர் விடுதலைக்கூட்டணியின் சில முக்கியஸ்தர்கள் மத்தியில் நீலன் சம்பந்தன் ஆனந்தசங்கரி போன்றவர்களின் நடவடிக்கைகள் பற்றி கடும் அதிருப்தியும் ஆட்சேபனைகளும் எழுந்தன.

அடுத்தவாரம் கொழும்பில் உள்ள தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைமைக்காரியாலயத்தில் நிறைவேற்றுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பபட்டது. காரசாரமான விவாதங்கள் நடந்தன.

சந்திரிக்காவுக்காக வக்காலத்து வாங்கியது தேவையற்ற செயல். கூட்டணி அதை செய்திருக்க கூடாது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் உட்பட சிலர் கூறினர்.

சந்திரிக்கா அப்படி கூறினாரா இல்லையா என ஆரூடம் கூறுவதற்கு தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு என்ன தேவை இருக்கிறது என சிலர் கண்டித்தனர்.

நீலன் சம்பந்தன் ஆனந்தசங்கரி மீது கண்டனங்கள் எழுந்தன. ஆனந்தசங்கரிக்கு கோபம் வந்துவிட்டது.

டொக்டர் மடத்திற்கு ஷோல் எடுங்கோ. இவனை ( குமாரை) துலைக்கவேணும் என ஆத்திரத்துடன் கத்தினார் ஆனந்தசங்கரி.

தமிழர் விடுதலைக்கூட்டணியில் உள்ள முக்கியஸ்தர்கள் நீலனை டொக்டர் என்றுதான் அழைப்பார்கள்.

கைத்தொலைபேசியை எடுத்தவாறு வெளியில் சென்ற நீலன் சற்று நேரத்தில் நிறைவேற்றுக்குழு கூட்டம் நடைபெற்ற மண்டபத்திற்குள் வந்தார். சம்பந்தனுடனும் ஆனந்தசங்கரியுடனும் இரகசியமாக ஏதோ பேசினார்.

அன்று மாலை நீலன் சம்பந்தன் ஆனந்தசங்கரி ஆகியோர் ஜனாதிபதி சந்திரிக்காவை சந்தித்தனர். நீண்டநேரம் பேசினர். பல திட்டங்கள் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அது என்ன என்பது யாருக்கும் தெரியாது.

சில தினங்களில் நீலன் சம்பந்தன் ஆனந்தசங்கரி ஆகியோருக்கு குண்டுதுளைக்காத கார்கள் ஜனாதிபதி சந்திரிக்காவால் வழங்கப்பட்டது. இவர்களுக்கு குண்டுதுளைக்காத கார்கள் மட்டுமல்ல சில உறுதிமொழிகளையும் சந்திரிக்கா வழங்கியிருந்தார்.

(தொடரும்)
 

 
   

:: Universal Currency Converter ::


நாணயமாற்று

this amount
பெறுமதியை வழங்கவும்

of this type of currency
மாற்றும் நாணயம்

into this type of currency.
மாற்றவேண்டிய நாணயம்
 


 

 



Copyright 2000-2007 Tamiowebradio.com